ETV Bharat / city

'தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்...' கிறிஸ்துவ மத போதகர்கள் குறித்த அப்பாவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

author img

By

Published : Jul 26, 2022, 12:14 PM IST

கிறிஸ்துவ மத போதகர்கள் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் இல்லையென்றால் தமிழ்நாடு பீகாராக மாறியிருக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவுக்கு பேசியதற்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

TN speaker appavu
TN speaker appavu

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் சலசலப்பை உண்டாக்குவது வழக்கம். இந்நிலையில், தற்போது கிறிஸ்துவ மதபோதகர்கள் குறித்து அவர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கிறிஸ்துவர்கள் நடத்திய கல்வி நிலையங்களால் பல்வேறு தரப்பினர் கல்வி பெற்று தமிழகம் தற்போது வளர்ச்சியைடந்துள்ளது என்றும், அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடும் பீகாரைப் போன்று கல்வியில் பின்தங்கியிருக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியதாக கூறப்படுகிறது.

இதனை தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (ஜூலை 25) விடுத்துள்ள ட்வீட் பதிவில், 'திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசுக்கு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம்தான். கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் , உங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு என்று முதல்வருக்கு தெரியும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவ மத போதகர்கள்தான். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இன்றைய தமிழகம்' என சபாநாயகர் அப்பாவு பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மதவாதம் இதுவன்றோ? மத சார்பற்ற அரசு என்று அழைத்துக்கொள்ளக்கூடிய தகுதியை திமுக அரசு இழந்து விட்டது. இந்து விரோத அரசு என்ற விமர்சனம் உறுதியாகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத போதகர்கள் மதமாற்றத்திற்கு காரணமானவர்கள் என்பதால் தமிழகம் அவர்களின் மேல் கட்டப்பட்டது என்கிறாரோ?" என நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அப்பாவு , வரலாறு குறித்து தான் பேசியதாக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், "கிறிஸ்துவ மிஷினரிகள் மூலம் மட்டுமே கல்வி அனைவரிடத்திலும் சென்றுள்ளது. சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டு வந்தது கிறிஸ்துவ மிஷினரிகள்தான். திராவிட இயக்கம் அதன் நீட்சிதான்" என்றும் பதிலளித்துள்ளார்.

நாராயணன் திருப்பதி கருத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தற்போது விவாதம் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கேள்வி கேட்டிருந்தால் நேரலை செய்யப்பட்டிருக்கும்' - ஈபிஎஸ்ஸை கிண்டல் செய்த அப்பாவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.